கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களின் அன்னையர் தின வாழ்த்துச் செய்தி
பதிவு: 13 May 2019, 13:07:29 மணி
நீரின்றி மட்டுமல்ல தாயின்றியும் அமைவதில்லை உலகு! மனித உயிரினத்தின் பிறப்பு வடிவமே தாய் தான். அன்பு, கருணை, நேசம் ஆகிய உயரிய குணங்களுக்கு உயிர் உதாரணம் காட்ட வேண்டுமானால் அதுவும் தாய் தான். தனது ரத்தத்தை பாலாக்கித் தந்து உலகுக்கு உயிர்களைக் கொடுப்பவளும் தாயே! அதனால் தான் தன்னலம் கருதாத உள்ளத்தை தாயுள்ளம் எனப் போற்றுகிறோம். சுமந்து, பெற்று, சோர்வின்றி வளர்த்து, துன்பங்களைத் தனதாக்கி இன்பங்களைப் பிள்ளைகளுக்கு வழங்கும் அன்னையர் அனைவரையும் நாம் எந்நாளும் வணங்க வேண்டும்.
தாய்த்திருநாளாம் இந்நாளில் எனை ஈன்ற தாயாம் தயாளு அம்மாளின் கருணை பொங்கிய காலடிகளைத் தொட்டு வணங்குகிறேன்.
பெற்ற தாய்மார்க்கும், பெறாத நிலையிலும் ஆதரவற்ற குழந்தைகளை எடுத்து வளர்க்கும் பேருள்ளம் பெற்ற தாய்மார்க்கும் என் இனிய அன்னையர் தின வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.