"நெருக்கடி நிலையை எதிர்த்து ஓராண்டு சிறைவாசம் அனுபவித்தது உட்பட பல்வேறு போராட்டங்களைக் கொண்ட அரைநூற்றாண்டு தியாக வரலாறு என்னுடையது; பழனிசாமியின் வரலாறு அவமானகரமானது"
பதிவு: 23 Mar 2021, 10:29:34 மணி
"நெருக்கடி நிலையை எதிர்த்து ஓராண்டு சிறைவாசம் அனுபவித்தது உட்பட பல்வேறு போராட்டங்களைக் கொண்ட அரைநூற்றாண்டு தியாக வரலாறு என்னுடையது; பழனிசாமியின் வரலாறு அவமானகரமானது"
- கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உரை.
இன்று (22-03-2021), திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள், தேர்தல் பரப்புரைப் பயணத்தின்போது, இராமநாதபுரத்தில் பொதுமக்களிடையே உரையாற்றி வாக்கு சேகரித்தார்.
கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ஆற்றிய உரையின் விவரம் வருமாறு:
வரும் ஏப்ரல் மாதம் ஆறாம் தேதி நடைபெறவிருக்கும் சட்டமன்ற பொதுத்தேர்தலில், மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளர்களை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க வேண்டும் என்று உங்களிடத்தில் கேட்பதற்காக தேடி நாடி வந்திருக்கிறேன்.
இராமநாதபுரம் தொகுதியில் போட்டியிடும் நம்முடைய கழக வேட்பாளர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் அவர்கள், அவர் இந்த மாவட்டத்தின் பொறுப்பாளராக இருந்து கழகத்தை வழி நடத்திக் கொண்டிருப்பவர் மட்டுமல்ல, மறைந்த நம்முடைய காதர்பாட்சா வெள்ளைச்சாமி அவர்களின் அருமை மகன். எனவே அவரைத் தான் தேர்ந்தெடுத்து இந்த இராமநாதபுரம் தொகுதிக்கு மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் சார்பில் உங்களிடத்தில் ஒப்படைத்திருக்கிறோம். அவருக்கு உதயசூரியன் சின்னத்திலும், முதுகுளத்தூர் தொகுதியில் நம்முடைய கழக வேட்பாளராக மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளராக மதிப்பிற்குரிய ராஜகண்ணப்பன் அவர்கள் போட்டியிடுகிறார். அவரைப் பற்றி அறிந்தவர்கள் புரிந்தவர்கள் நீங்கள். முன்னாள் அமைச்சராக இருந்து, அந்த பொறுப்பைப் பயன்படுத்தி மக்களுக்கு பல்வேறு திட்டங்களை - சாதனைகளைச் செய்திருக்கிறார் என்பது உங்களுக்கு நன்றாக தெரியும். மக்களோடு மக்களாக இருந்து பணியாற்றும் ஒரு ஆற்றலாளர். நம்முடைய கழக வேட்பாளராக முதுகுளத்தூர் தொகுதியில் போட்டியிடும் ராஜகண்ணப்பன் அவர்களுக்கு உதயசூரியன் சின்னத்திலும், பரமக்குடி தொகுதியில் போட்டியிடும் நம்முடைய கழக வேட்பாளர் முருகேசன் அவர்கள் மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினராக இருந்து பணியாற்றியவர். ஒரு எளிய தொண்டராக அனைவரிடமும் அன்புடன் பழகுபவர். அவருக்கு உதயசூரியன் சின்னத்திலும், திருவாடானை தொகுதியில் காங்கிரஸ் பேரியக்கத்தின் வேட்பாளராக கருமாணிக்கம் அவர்கள், அவர் ஏற்கனவே சட்டமன்றத்தில் காங்கிரஸ் கட்சியின் தலைவராக சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றிய, இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவராக விளங்கும் கரி.இராமசாமி அவர்களுடைய அருமை மகன் தான் கருமாணிக்கம். அவரை கை சின்னத்திலும் ஆதரித்து மிகப்பெரிய வெற்றியை தேடித் தரவேண்டும் என்று உங்களை கேட்டுக் கொள்ள கடமைப்பட்டிருக்கிறேன்.
சேது மன்னர் ஆண்ட மண்ணுக்கு உங்களிடத்தில் வாக்குக் கேட்க வந்திருக்கிறேன். எந்த பகையையும் எதிர்கொள்ளும் வீரம் நிறைந்த மண்ணுக்கு நான் வந்திருக்கிறேன். இந்த மண்ணை காக்க பெரும் போரை தன்னுடைய 12-வது வயதில் சேது மன்னர் தொடங்கிய அந்த உத்வேகத்தோடு அந்த உணர்ச்சியோடு இருக்கும் இந்த மண்ணுக்கு நான் உங்களிடத்தில் வாக்கு கேட்க வந்திருக்கிறேன். 616 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தலைவர் கலைஞர் அவர்களால் இராமநாதபுரம் கூட்டுக் குடிநீர்த் திட்டத்தைக் கொண்டு வந்து, இந்த மாவட்டத்தில் தண்ணீர்ப் பஞ்சத்தைப் போக்கிய தலைவர் கலைஞருடைய மகன் ஸ்டாலின் உங்களிடத்தில் வாக்குக் கேட்க வந்திருக்கிறேன்.
இன்றைக்கு தேர்தல் களத்தில் முதலமைச்சர் மாண்புமிகு பழனிசாமி அவர்கள் ஏதேதோ உளறிக் கொண்டிருக்கிறார். அவர் ஆட்சியின் சாதனைகளை சொல்லி வாக்குக் கேட்டால் நாங்கள் குறுக்கே நிற்கப் போவதில்லை.
அவர், உழைத்து உழைத்து முன்னுக்கு வந்தாராம். அதைத் தொடர்ந்து சொல்லுகிறார். மற்றவர்கள் உழைக்கவில்லையாம். அவர் எப்படி உழைத்தார் என்பது நாட்டுக்கே தெரியும். உழைத்து உழைத்து வந்தாரா? ஊர்ந்து ஊர்ந்து வந்தாரா? என்பது உங்களுக்கும் தெரியும். இதற்கு சாட்சி சொல்ல வேண்டியதில்லை. சமூகவலைதளங்களில் அவர் ஊர்ந்து போன காட்சிகள் எல்லாம் வந்தது.
நான் எம்.எல்.ஏ.க்களால் முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டேனே தவிர, வேறு எந்த வகையிலும் நான் தேர்ந்தெடுக்கப்படவில்லை என்று சொல்லுகிறார். அதை நான் வாதத்திற்கு ஏற்றுக் கொள்கிறேன்.
ஊர்ந்து போனது உண்மையா? இல்லையா? நீங்கள் அதைச் சொல்லுங்கள். அதை இல்லை என்று நிருபித்து விட்டீர்கள் என்றால் அதற்கு என்ன தண்டனை கொடுத்தாலும் நான் ஏற்றுக்கொள்ளத் தயாராக இருக்கிறேன்.
அதை நான் நிரூபிக்கிறேன். நீங்கள் தண்டனை ஏற்றுக் கொள்ள தயாராக இருக்கிறீர்களா? எனவே ஊர்ந்து ஊர்ந்து சென்று இன்றைக்கு ஒரு இடத்தில் உட்கார்ந்து இருக்கிறார். அதைப்பற்றி நான் கவலைப்படவில்லை.
உழைத்து உழைத்து வந்தேன் என்று சொல்கிறார். உழைப்பவர் தான் முன்னுக்கு வர முடியும் என்ற ஒரு அரிய கருத்தை சொல்லி இருக்கிறார். நீங்கள் உழைத்த உழைப்பை நாடே பார்த்து கைகொட்டி சிரித்து கொண்டிருக்கிறது.
ஸ்டாலின் உழைத்தா வந்தார் என்று அவர் கேட்கிறார். நான் உழைத்துத்தான் வந்தேன் என்பதற்கு என்னுடைய 50 ஆண்டுகால அரசியல் வாழ்க்கை இன்றைக்கும் சாட்சியாக இருக்கிறது.
முதன்முதலில் 1966-ஆம் ஆண்டு கோபாலபுரம் பகுதியில் அங்கிருக்கும் பள்ளி மாணவர்களை ஒன்று சேர்த்து இளைஞர் தி.மு.க. என்ற ஒரு அமைப்பை தொடங்கியவன் இந்த ஸ்டாலின்.
அதற்குப் பிறகு, 1971-ஆம் ஆண்டு பொதுத் தேர்தல் நடந்தபோது கழகத்தின் பிரச்சார நாடகம் ‘முரசே முழங்கு’ என்ற பெயரில் தமிழ்நாடு முழுவதும் நாடகம் நடத்தியவன்தான் இந்த ஸ்டாலின். அதற்குப் பிறகு, 1975-இல் இந்தியாவில் நெருக்கடி நிலை அமல்படுத்தப்பட்ட போது, தமிழ்நாட்டில் திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி நடந்துகொண்டிருந்தது. முதலமைச்சராக கலைஞர் இருக்கிறார். அப்போது அந்த நெருக்கடி நிலையை எதிர்த்து திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில், “அம்மையார் இந்திரா காந்தி அவர்களே… நீங்கள் நெருக்கடி நிலையை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். நெருக்கடி நிலையைப் பயன்படுத்தி கைது செய்து சிறையில் வைத்திருக்கும் தலைவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்“ என்று திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் தீர்மானம் போட்டோம்.
அந்த தீர்மானம் போடுவதற்கு முதல் நாள், அம்மையார் இந்திரா காந்தி அவர்கள் டெல்லியில் இருந்து 2 தூதுவர்களை தமிழ்நாட்டிற்கு கலைஞருடைய வீட்டிற்கு கோபாலபுரத்திற்கு அனுப்பிவைத்தார். அவ்வாறு வந்த தூதுவர்கள் கலைஞரைச் சந்தித்து, “நீங்கள் நெருக்கடி நிலையை ஆதரிக்க வேண்டாம். ஆனால் எதிர்க்கக்கூடாது. அவ்வாறு எதிர்த்தால் உங்கள் ஆட்சி அடுத்த வினாடி கவிழ்க்கப்படும்” என்று தூதுவர்கள் சொன்னார்கள்.
அப்போது அந்த தூதுவர்களிடத்தில் கலைஞர், “நான் பெரியாரால் உருவாக்கப்பட்டவன். பேரறிஞர் அண்ணாவால் வளர்க்கப்பட்டவன். ஆட்சி எனக்கு முக்கியமல்ல. ஜனநாயகம் தான் எனக்கு முக்கியம். உயிரே போனாலும் கவலைப்பட மாட்டேன். ஜனநாயகத்தைத் தான் காப்பாற்றுவேன்“ என்று சொல்லி அவர்களை அனுப்பிவிட்டு, அடுத்தநாள் சென்னை கடற்கரையில் லட்சக்கணக்கான மக்களை ஒன்றுதிரட்டி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் அந்தத் தீர்மானத்தை நிறைவேற்றினார்.
அதை நிறைவேற்றிய பின்னர் 1976-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 31ஆம் நாள் கவிழ்க்கப்பட்டது. அவ்வாறு கவிழ்க்கப்பட்ட பிறகு என்னோடு சேர்த்து 500க்கும் மேற்பட்டவர்கள் மிசா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு ஓராண்டு காலம் சிறையில் இருந்தோம்.
கொள்ளையடித்தல்ல, லஞ்சம் வாங்கிவிட்டு அல்ல, ஊழல் செய்துவிட்டு அல்ல, ஒரு அரசியல் கைதியாக சர்வாதிகாரத்தை எதிர்த்து போராடியதற்காக அன்றைக்கு கைது செய்யப்பட்டு ஓராண்டு காலம் சிறையில் இருந்தவன் தான் இந்த ஸ்டாலின் என்பதை பெருமையோடு நான் தெரிவிக்க விரும்புகிறேன்.
அதுமட்டுமா 1981-இல் கைலாசம் கமிஷனை எதிர்த்த காரணத்தால் கைது செய்யப்பட்டு ஒரு மாதம் சிறையில் இருந்தேன். 1984-இல் சட்ட மன்ற அலுவலகத்தில் நடந்த அராஜகத்திற்கு எதிராக போராடிய போது சிறைபிடிக்கப்பட்டேன். 1987-இல் குடிநீர் பிரச்சினைக்காக போராடியதற்கு சிறையில் அடைக்கப்பட்டேன். 1987-இல் மொழிப்போர் காலத்தில் என்மீது பொய் வழக்கு போடப்பட்டு கைது செய்யப்பட்டு சிறையில் இருந்தேன். 1990-ஆம் ஆண்டு இந்தியாவில் தேசிய முன்னணியின் தொடக்க விழா நடந்தது. அதன் தொடர்ச்சியாக தமிழ்நாட்டில் நடந்தது. அதற்காக ஒரு மிகப்பெரிய பேரணி நடத்தினோம். அந்தப் பேரணியை பார்த்த வடமாநில தலைவர்கள் - அகில இந்திய தலைவர்கள் அத்தனை பேரும் பாராட்டினார்கள். ஏனென்றால் அந்தப் பேரணியை முன்னின்று நடத்தியவன் நான். பிரதமராக இருந்த வி.பி.சிங் அவர்களால் மனதாரப் பாராட்டப்பட்டவன் தான் இந்த ஸ்டாலின் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். 1993-இல் குடிநீருக்காக நடத்திய போராட்டத்தில் சிறைப் பிடிக்கப்பட்டேன், 1994-இல் 69 சதவிகித இடஒதுக்கீட்டிற்காக போராடியதற்காக சிறைப்பிடிக்கப்பட்டேன். 2003-இல் சென்னையில் இருக்கும் ராணி மேரி கல்லூரியை இடிப்பதற்காக அம்மையார் ஜெயலலிதா ஆட்சியில் திட்டமிட்ட போது அதை எதிர்த்து போராடிய காரணத்தால் சிறைபிடிக்கப்பட்டேன்.
இவ்வாறு தியாகத்தால் ஆனது தான் இந்த ஸ்டாலினுடைய அரசியல் வரலாறு. இதுபோல முதலமைச்சர் பழனிசாமிக்கு வரலாறு இருக்கிறதா?
உங்கள் கடந்தகால வரலாற்றை பேச ஆரம்பித்தால் நீங்கள் அந்த பொறுப்பில் இருந்து மாட்டீர்கள். அவ்வளவு அவமானம் அதில் அடங்கி இருக்கிறது. அது மட்டுமல்ல, தலைவர் கலைஞர் அவர்களிடத்தில் பத்திரிகை நிருபர்கள் ஒருமுறை “உங்கள் மகன் ஸ்டாலினிடத்தில் பிடித்தது என்ன? என்று ஒரு கேள்வியைக் கேட்டார்கள்.
அப்போது கலைஞர் அவர்கள், “என்னுடைய மகன் ஸ்டாலினிடத்தில் பிடித்தது உழைப்பு… உழைப்பு… உழைப்பு…“ என்று பெருமையோடு சொன்னார். அதைத்தான் நான் பெருமையாக கருதுகிறேன்.
தலைவர் கலைஞரால் அவ்வாறு பாராட்டப்பட்டேன். அதைவிட எனக்கு எந்தப் பதவியும் தேவையில்லை.
ஆனால் இன்றைக்கு உழைத்துக் கொண்டிருக்கிறாரா ஸ்டாலின்? என்று ஊர்ந்து போய் காலில் தவழ்ந்து சென்று முதலமைச்சராக இருக்கும் பழனிசாமி கேட்பது தான் விந்தையிலும் விந்தையாக இருக்கிறது.
கடந்த முறை நாடாளுமன்றத் தேர்தல் வந்த நேரத்தில் பிரதமராக இருக்கும் மோடி அவர்கள் தமிழ்நாட்டிற்கு வந்தபோது எத்தனையோ உறுதிமொழிகளைத் தந்தார்கள். அந்த உறுதிமொழிகள் இன்றைக்கு காப்பாற்ற பட்டிருக்கிறதா?
அதற்கு ஒரே ஒரு உதாரணம். மதுரையில் இருக்கும் எய்ம்ஸ் மருத்துவமனை. எய்ம்ஸ் மருத்துவமனை என்று சொல்லமுடியாது. எய்ம்ஸ் செங்கல். ஏன் என்றால் அங்கு செங்கல் தான் இருக்கிறது.
நாடாளுமன்றத்தில் 2015-ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டு அதற்குப் பிறகு 2019-ஆம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டு இப்போது 2021-ஆம் ஆண்டில் இன்றைக்கு செங்கல் மட்டும் இருக்கிறது. அதையும் காணவில்லை என்கிறார்கள். எனவே எதையும் நிறைவேற்றவில்லை.
பிரதமர் மோடி அவர்கள் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த நேரத்தில், “இந்தியாவில் ஆண்மையுள்ள பிரதமர் இல்லை. அதனால் தான் அண்டை நாடு நம்மை சீண்டி பார்க்கிறது” என்று மன்மோகன் சிங்கை குறை சொல்லி பேசியவர்.
இன்றைக்கு பிரதமராக இருக்கும் மோடி அவர்கள், 2014-இல் ஆட்சிக்கு வந்தவுடன் மீனவர்களை காக்க கூட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று சொன்னார்.
அந்த அடிப்படையில் 2014-இல் ஆட்சிக்கு வந்தவுடன் ஜூன் மாதம் 17-ஆம் தேதி ஒரு முறை இந்தியா - இலங்கை அமைச்சர்களிடையே பேச்சுவார்த்தை நடத்தினீர்கள். அதில் எந்த பலனும் கிடைக்கவில்லை. தொடர்ந்து 7 ஆண்டு காலமாக மீனவர்கள் தாக்கப்படும் கொடுமைகள் நடந்துகொண்டிருக்கிறது.
2015இல் – தாக்குதல், 2016இல் – தாக்குதல், 2017இல் - தங்கச்சிமடம் மீனவர் பிரிட்டோ கொலை, 2018இல் - பெட்ரோல் குண்டு வீசி தாக்கியதில் படகுகள் சேதம், 2020-இல் இலங்கை கடற்படை தாக்கியது மட்டுமல்ல, அதில் 28 பேர் கைது செய்யப்பட்டார்கள். அந்த தாக்குதல் நடந்த வீடியோ வெளியானது. 2021-ஆம் ஆண்டு ஜனவரி - மேவியா நாகராஜன், செந்தில்குமார், சாம்சன், டார்வின் ஆகிய 4 மீனவர்கள் படுகொலை.
எனவே நம்முடைய மீனவர்களை மிரட்டுவது, வலைகளை அறுப்பது, படகுகளை பறிப்பது என அராஜகங்கள் அளவில்லாமல் போய் கொண்டுதான் இருக்கிறது. அதில் நம்முடைய மீனவர்கள் சிக்கி இருக்கிறார்கள்.
பா.ஜ.க.வை பொறுத்தவரையில் அதைப் பற்றி கிஞ்சித்தும் கவலைப்படுவதில்லை. அதேபோல இங்கிருக்கும் அடிமை அரசு கூனிக்குறுகி, அனைத்திற்கும் ஆமாம் சாமி போட்டுக்கொண்டிருக்கும் பழனிசாமி அரசு அதை பற்றி எதுவும் கவலைப்படுவதில்லை.
எனவே, இந்தத் தேர்தல் நேரத்தில் உறுதிமொழியாக நான் சொல்ல விரும்புவது, கழக ஆட்சியில் மீனவர்கள் உரிமையை நிலைநாட்ட அனைத்து நடவடிக்கைகளும் துரிதமாக எடுப்போம் என்பதைத்தான்.
அதேபோல சிறுபான்மையினருக்கு தொடர்ந்து மத்திய அரசும் மாநில அரசும் என்னென்ன துரோகம் செய்து கொண்டிருக்கிறது என்பது தெரியும்.
உதாரணமாக, குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை அவசர அவசரமாக கொண்டுவந்து நாடாளுமன்றத்தில் அதை ஆதரித்தார்கள். ஒன்றை மட்டும் ஒப்பிட்டுப் பாருங்கள்.
மாநிலங்களவையில் அது தோற்கும் சூழ்நிலையில் இருக்கிறது. ஆனால் அ.தி.மு.க. 11 ஓட்டு – பா.ம.க. 1 ஓட்டு. இந்த 2 பேரும் அந்தச் சட்டத்தை எதிர்த்து ஓட்டு போட்டிருந்தால் அந்த சிஏஏ சட்டம் நிறைவேறி இருக்காது.
ஆனால் இவர்கள் ஆதரித்து ஓட்டுப்போட்ட காரணத்தால் அந்த சிஏஏ சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
இப்போது இந்த தேர்தல் அறிக்கையில் பழனிசாமி, குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை எதிர்ப்போம் என்று சொல்லியிருக்கிறார்.
நாடாளுமன்றத்தில் ஆதரித்து ஓட்டுப் போட்டு பச்சை துரோகத்தைச் செய்திருக்கிறார்கள். இப்போது தேர்தலுக்காக, சிறுபான்மை மக்களை ஏமாற்றுவதற்காக இன்றைக்கு அறிவித்திருக்கிறார். இதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
இந்த சட்டத்தின் மூலம் சிறுபான்மை சமூகத்தைச் சார்ந்தவர்களை உரிமை அற்றவர்களாக ஆக்குவதற்கான முயற்சியை பா.ஜ.க. செய்கிறது. அதற்கு அ.தி.மு.க. ஆட்சி தலையாட்டிக் கொண்டு இருக்கிறது.
இந்த சட்டத்தை தொடக்கத்திலிருந்து திராவிட முன்னேற்றக் கழகம் நாடாளுமன்றத்திலும் எதிர்த்து குரல் கொடுத்தோம். எதிர்த்து ஓட்டு போட்டோம். அதற்குப் பிறகு தமிழ்நாடு முழுவதும் மக்களிடத்தில் கையெழுத்து இயக்கத்தை நடத்தி 2 கோடி கையெழுத்துகளைப் பெற்று குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்தோம்.
அப்போது சட்டமன்றத்தில் முதலமைச்சர் பழனிசாமி, “இந்த சட்டத்தினால் சிறுபான்மை சமுதாயத்தைச் சார்ந்த மக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை“ என்று பதில் சொன்னார்.
நான் அப்போதும், சிறுபான்மையினரும் ஈழத்தமிழர்களும் பாதிக்கப்படுவார்கள் என்பதை ஆதாரங்களோடு விளக்கிச் சொன்னேன். எனவே இப்போது நாடகத்தை நடத்திக் கொண்டிருக்கிறார். நிச்சயமாக இந்த நாடகத்தைத் தமிழ்நாட்டில் இருக்கும் மக்கள் நம்பத் தயாராக இல்லை. இந்தத் தேர்தலில் அவர்களுக்கு சரியான பாடத்தை வழங்குவார்கள் என்று உறுதியோடு தெரிவிக்க விரும்புகிறேன்.
அதேபோல விலைவாசி விண்ணை முட்டும் வகையில் விஷம் போல ஏறிக் கொண்டிருக்கிறது. அதற்கு முழு காரணம் பெட்ரோல் டீசல் விலை உயர்வு. மோடியோ அல்லது இங்கு இருக்கும் பழனிசாமியோ அதைக் குறைக்கும் முயற்சியில் ஈடுபடவில்லை.
அதனால் இன்றைக்கு காய்கறி விலை, மளிகை பொருட்களின் விலை உயர்ந்து விட்டது. மக்களுடைய அன்றாடத் தேவையான பொருட்களின் விலை உயர்ந்து நிற்கின்ற காரணத்தால் சேமிப்பு என்பதே இல்லாத ஒரு சூழ்நிலை ஏற்பட்டுவிட்டது.
இதைப்பற்றி இந்த ஆட்சி கவலைப்படவில்லை. அவர்கள் கவலை எல்லாம் கொள்ளை அடிப்பது தான். கரப்ஷன் - கமிஷன் – கலெக்ஷன்.
எனவே இப்படிப்பட்ட ஆட்சியை ஒழிப்பதற்கு வரும் ஏப்ரல் 6-ஆம் தேதி நீங்கள் எல்லாம் ஒட்டுமொத்தமாக ஒன்றுசேர்ந்து நம்முடைய மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களை வெற்றி பெற வைக்க வேண்டும்.
நாம் வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தவுடன் என்னென்ன உறுதிமொழிகளை வாக்குறுதிகளை நிறைவேற்றப் போகிறோம் என்று நம்முடைய தேர்தல் அறிக்கையில் தெளிவாக சொல்லி இருக்கிறோம்.
அதில், மீனவ சமுதாயத்தினரை கடல்சார் பழங்குடியின மக்கள் என்று பழங்குடியினர் பட்டியலில் சேர்ப்பதற்கு தி.மு.க. ஆட்சி நிச்சயம் முயற்சி செய்யும், மீனவர்களுக்கு 2 லட்சம் புதிய வீடுகள் கட்டித் தரப்படும், மீனவர் நலனை பாதுகாத்திட தேசிய மீனவர் நல ஆணையம் அமைத்திட மத்திய அரசை தி.மு.க. தொடர்ந்து வலியுறுத்தும், மீன்பிடி தடைக்கால நிவாரண தொகை 8000 ரூபாயாகவும், மழைக்கால நிவாரண உதவித் தொகை 5,000 ரூபாயாகவும் உயர்த்தி வழங்கப்படும், விசைப்படகிற்கு மானிய விலை டீசல் 2000 லிட்டராக உயர்த்தி வழங்கப்படும், கட்டுமரம், நாட்டுப்படகு, ஃபைபர் படகு ஆகியவற்றிற்கு வழங்கப்பட்டு வரும் எரிபொருள் அளவு 400 லிட்டராக உயர்த்தி வழங்கப்படும், தேவைப்படுகின்ற கடற்கரையோர மீனவர் கிராமங்களில் கடல் அரிப்பினைத் தடுத்து தூண்டில் வளைவு தடுப்பு சுவர் அமைத்து தரப்படும், மீனவர்கள் பரிசல் மற்றும் வலைகள் வாங்குவதற்காக 50 சதவிகிதம் மானியம் வழங்கப்படும்,\ முந்தைய தி.மு.க. ஆட்சிக்காலத்தில் எஃப்.ஆர்.பி ஐ.பி. கட்டுமரம் போன்ற படகுகளில் மீன் பிடிப்பவர்களுக்கு மானிய விலையில் வழங்கப்பட்ட ஐஸ்பெட்டிகள் மீண்டும் வழங்கப்படும், மீன் வியாபாரம் செய்யும் பெண்களுக்கும் ஐஸ்பெட்டிகள் வழங்கப்படும்.
அத்துடன், சிறுபான்மையினர் நலனுக்காக, கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் சிறுபான்மைச் சமூகத்தினர் உரிய பங்கினைப் பெறுவதற்கு ஏதுவாக நீதியரசர் சச்சார் ஆணையத்தின் பரிந்துரைகளை செயல்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ள மத்திய அரசைத் தொடர்ந்து வலியுறுத்துவோம் என்பது உள்ளிட்ட வாக்குறுதிகளையும் வழங்கி உள்ளோம்.
அனைத்துத் தரப்பு மக்களுக்காக, ஆலயங்கள் புனரமைப்பு - குடமுழுக்கு பணிகளுக்கு 1,000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும், மசூதி, தேவாலயம் சீரமைக்க 200 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும்.
பெண்களுடைய முன்னேற்றத்திற்காக, மகளிருக்கு உரிமைத் தொகையாக மாதம் 1,000 ரூபாய் வழங்கப்படும், மகளிருக்கான செலவைக் குறைக்க உள்ளூர் பேருந்துகளில் இலவசமாக பயணம் செய்யலாம் என்பது உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்கான வாக்குறுதிகளையும் அளித்துள்ளோம். விலைவாசியை குறைக்க பெட்ரோல், டீசல், பால் விலை குறைக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளோம்.
மாணவர்கள் இளைஞர்கள் நலனை அடிப்படையாக வைத்து அவர்கள் கல்விக்காக வங்கிகளில் வாங்கியிருக்கும் கடன் ரத்து செய்யப்படும், அரசு அலுவலகங்களில் காலியாக இருக்கும் பணியிடங்களில் 3 லட்சத்து 50 ஆயிரம் தமிழக இளைஞர்களே நியமிக்கப்படுவார்கள் என்பது உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் குறித்த உறுதிகளையும் வழங்கி உள்ளோம்.
மேலும், கொரேனா காலத்தில் நிவாரணத் தொகையாக 5,000 ரூபாய் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினேன். ஆனால் அவர்கள் வெறும் 1,000 ரூபாய் வழங்கினார்கள். மீதமிருக்கும் 4,000 ரூபாயை நாம் ஆட்சி பொறுப்பேற்ற பின்னர், தலைவர் கலைஞரின் பிறந்த நாளான ஜூன் 3-ஆம் தேதி அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் வழங்கப்படும்.
மாதம் ஒருமுறை மின் கட்டணம் செலுத்தும் முறை அமல்படுத்தப்படும். இப்போது பொதுவான உறுதிமொழிகளை வாக்குறுதிகளை நான் இங்கு பட்டியல் போட்டு சொன்னேன்.
இந்த இராமநாதபுர மாவட்டத்திற்கான வாக்குறுதிகளை இப்போது தெரிவிக்கிறேன்.
இராமநாதபுரம், பரமக்குடி மற்றும் கீழக்கரை ஆகிய ஊர்களில் பாதாள சாக்கடை திட்டம், முதுகுளத்தூரில் பொறியியல் கல்லூரியும், தொழிற்பயிற்சி நிலையமும் தொடங்கப்படும், இராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் காவிரிக் கூட்டுக் குடிநீர் திட்டம் முழுமையாக நிறைவேற்றப்படும், 350 கிராமங்கள் பயனடையும் வகையில் ஆர்.எஸ்.மங்கலம் பெரிய கண்மாய் மற்றும் இராமநாதபுரம் மாவட்டம் சக்கரக்கோட்டை கண்மாய் தூர்வாரப்படும், பரமக்குடியில் அரசு பாலிடெக்னிக் கல்லூரி, திருவாடானையில் நெல் கொள்முதல் நிலையம், இராமநாதபுரத்தில் அரசு ஆசிரியர் பயிற்சி கல்லூரி, அரசு கல்வியியல் மற்றும் உடற்கல்வியியல் கல்லூரி, தொண்டியில் பேருந்து பணிமனை, திருவாடானை ஊராட்சி பேரூராட்சியாகத் தரம் உயர்த்தப்படும், திருவாடானையில் அரசு கலை அறிவியல் கல்லூரி, இராமநாதபுரம் மற்றும் பரமக்குடியில் குளிர்பதனக் கிடங்குகள், இராமேஸ்வரம், பரமக்குடி மற்றும் ஆர்.எஸ்.மங்கலத்தில் உள்ள அரசு மருத்துவமனைகள் நவீன மயமாக்கப்படும், நடராஜபுரம் - இராமகிருஷ்ணாபுரம் புதிய சாலை மற்றும் காரையூர் பகுதிகளில் மீனவர்கள் பயன்பாட்டிற்கு என்று சமுதாயக் கூடங்கள், முதுகுளத்தூர் மேற்கு ஒன்றியம் கீழக்குளத்தில் கால்நடை மருத்துவமனை, காவிரி - வைகை குழாய் இணைப்புத் திட்டம் விரைந்து செயல்படுத்தப்படும், நரிப்பையூரில் பின்னலாடை பயிற்சி மையம் தொடங்கப்படும். இவை எல்லாம் 5 ஆண்டுகளில் நிறைவேற்றப்பட இருக்கும் திட்டங்கள். கடந்த 7 ஆம் தேதி திருச்சிப் பொதுக்கூட்டத்தில் பத்தாண்டுகளுக்கான தொலைநோக்குப் பார்வையுடன் 7 உறுதிகளையும் அளித்துள்ளேன்.
நாம் இழந்திருக்கும் மாநில உரிமைகளை காக்க வேண்டுமா? வேண்டாமா?
தமிழ்நாட்டை இன்றைக்கு அடமானம் வைத்து இருக்கிறார்கள். அதை மீட்க வேண்டுமா? வேண்டாமா?
அதனால் நீங்கள் எல்லாம் உதயசூரியன் சின்னத்தை ஆதரித்து, நம்முடைய மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து வெற்றிபெற வைக்க வேண்டும்.
மீனவர்கள் வாழ்க்கைத் தரம் உயர, மாநில உரிமைகளைப் பாதுகாக்க, சிறுபான்மையினர் நலனைப் பாதுகாக்க, இராமநாதபுரம் மாவட்டத்தை முன்னேற்ற, நம்முடைய மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வேட்பாளர்களை வெற்றிபெற வைக்க வேண்டும் என்று உங்களை உரிமையோடு, உணர்வோடு, உங்களில் ஒருவனாக, உங்கள் வீட்டுப் பிள்ளையாக, அனைத்திற்கும் மேலாக தலைவர் கலைஞருடைய மகனாக, உங்கள் பாத மலர்களைத் தொட்டு அன்போடு கேட்டு விடைபெறுகிறேன். நன்றி. வணக்கம்.
இவ்வாறு கழகத் தலைவர் அவர்கள் உரையாற்றினார்.
இராயபுரத்தில் கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ஆற்றிய உரையின் விவரம் வருமாறு:
வருகின்ற ஏப்ரல் மாதம் ஆறாம் தேதி நடைபெறவிருக்கும் சட்டமன்ற பொதுத்தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்துச் சிறப்பான வெற்றியைத் தேடித் தரவேண்டும்.
இராயபுரம் தொகுதியில் கழக வேட்பாளர், நம்முடைய மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் வேட்பாளர் ஐட்ரீம் இரா.மூர்த்தி அவர்கள், ஒரு பண்பாளர் - நல்லவர் - வல்லவர் மக்களுக்கு பணியாற்ற வேண்டும் என்பதில் ஆர்வத்தோடு இருப்பவர். அவருக்கு உதயசூரியன் சின்னத்திலும், மாதவரம் தொகுதியில் கழக வேட்பாளர் சுதர்சனம் அவர்கள், ஏற்கனவே அந்த தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு அந்த தொகுதியில் இருக்கும் மக்களுக்கு பல்வேறு பணிகளை தொடர்ந்து ஆற்றிக் கொண்டிருப்பவர். மாவட்டக் கழகத்தின் பொறுப்பாளராக இருந்து கட்சிப் பணியை தொடர்ந்து ஆற்றிக் கொண்டிருப்பவர். அவருக்கு உதயசூரியன் சின்னத்திலும், துறைமுகம் தொகுதியில் கழக வேட்பாளர், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வேட்பாளர், மாவட்டக் கழகத்தின் செயலாளர் பி.கே.சேகர் பாபு அவர்கள், ஏற்கனவே துறைமுகம் தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக இருந்து அந்த தொகுதி மக்களுடைய வாழ்வில் இரண்டறக் கலந்து ஒரு சிறந்த செயல் வீரராக விளங்கி கொண்டிருப்பவர். அவருக்கு உதயசூரியன் சின்னத்திலும், பெரம்பூர் தொகுதியில் நம்முடைய கழக வேட்பாளர் ஆர்.டி.சேகர் அவர்கள், ஏற்கனவே இடைத்தேர்தலில் நின்று பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றியை பெற்று அந்த பெரம்பூர் தொகுதி மக்களுக்கு பல்வேறு பணிகளை ஆற்றியவர் - ஆற்றிக் கொண்டிருப்பவர். அவர் மாவட்ட இளைஞரணி அமைப்பாளராக இருந்து, மாவட்டப் பொறுப்பாளராக பொறுப்பேற்று இன்று சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றி இப்போதும் வேட்பாளராக நிற்கிறார். அவருக்கு உதயசூரியன் சின்னத்திலும், திரு.வி.க. நகர் தொகுதியில் போட்டியிடும் நம்முடைய கழகத்தின் வேட்பாளர் தாயகம் கவி அவர்கள், ஏற்கனவே திரு.வி.க.நகர் தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு அந்த தொகுதி மக்களோடு இரண்டறக் கலந்து பணியாற்றிக் கொண்டிருக்கும் ஒரு செயல் வீரர். இலக்கிய நயத்தோடு பேசும் ஆற்றலைப் பெற்றவர். நாம் நடத்தும் ஆர்ப்பாட்டம், பேரணி எதுவாக இருந்தாலும் அங்கு முழங்கும் முழக்கம் தாயகம் கவியின் முழக்கமாக தான் இருக்கும். ஒரு எளிய தொண்டராக தொடர்ந்து அந்த தொகுதியில் பணியாற்ற வேட்பாளராக நிறுத்தப்பட்டு இருக்கிறார். அவருக்கு உதயசூரியன் சின்னத்திலும், ஆர்.கே.நகர் தொகுதியில் நம்முடைய கழக வேட்பாளராக ஜே.ஜே.எபினேசர் அவர்கள், இளைஞர் அணியில் பொறுப்பேற்று பணியாற்றிக் கொண்டிருப்பவர். மாவட்ட அமைப்பாளராக இருந்து செயல்படும் ஒரு சிறந்த செயல்வீரரை வேட்பாளராக தேர்ந்தெடுத்து உங்களிடத்தில் ஒப்படைத்திருக்கிறோம். அவருக்கும் உதயசூரியன் சின்னத்திலும், எழும்பூர் தொகுதியில் நம்முடைய கழக வேட்பாளர் பரந்தாமன் அவர்கள், அவர் சிறந்த வழக்கறிஞராக, நீங்கள் தொலைக்காட்சிகளில் பார்த்தீர்களென்றால் விவாத மேடைகளில் பங்கேற்று அழுத்தந்திருத்தமாக நமக்கு எதிராக வரும் கருத்துக்களை தவிடு பொடியாக்கும் வகையில் ஆற்றலோடு பேசும் ஒரு சிறந்த செயல் வீரர். அவரைத்தான் எழும்பூர் தொகுதியில் வேட்பாளராக நிறுத்தி இருக்கிறோம். அவருக்கு உதயசூரியன் சின்னத்திலும், திருவொற்றியூர் தொகுதியில் போட்டியிடும் நம்முடைய கழக வேட்பாளர் கே.பி.சங்கர் அவர்கள். ஏற்கனவே திருவொற்றியூர் தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு அமைச்சராகவும் பணியாற்றியவர் கே.பி.பி.சாமி அவர்கள். உடல் நலிவுற்று அவர் நம்மை விட்டு மறைந்து விட்டார். அவருடைய நினைவாக அவர் விட்டுச் சென்றிருக்கும் பணிகளை நிறைவேற்றிட வேண்டும் என்பதற்காக அவருடைய சகோதரர் கே.பி.சங்கர் அவர்களை இன்றைக்கு வேட்பாளராக தேர்ந்தெடுத்து உங்களிடத்தில் ஒப்படைக்கிறோம். அவருக்கு உதயசூரியன் சின்னத்திலும் ஆதரவு தந்து சிறப்பான வெற்றியை தேடித் தரவேண்டும் என்று உங்களை எல்லாம் நான் கேட்டுக்கொள்ள வந்திருக்கிறேன்.
சிலர் தேர்தல் நேரத்தில் வருவார்கள். வாய்க்கு வந்த படியெல்லாம் உறுதிமொழிகளை சொல்வார்கள். நான் அதைச் செய்வேன் இதைச் செய்வேன் என்று சொல்வார்கள். வானத்தை வில்லாக வளைப்பேன். வைகுண்டத்தை காட்டுவேன் என்று சொல்வார்கள். மணலைக் கயிறாக திரிப்பேன் என்று சொல்வார்கள்.
ஆனால் அப்படிப்பட்டவர்கள் அல்ல நாங்கள். உங்கள் வாழ்வில் ஏற்படும் சுக துக்க நிகழ்ச்சிகள் எதுவாக இருந்தாலும் உரிமையோடு பங்கேற்கும் ஸ்டாலின் தான் உங்களை தேடி நாடி உதயசூரியனுக்கு வாக்குக் கேட்க வந்திருக்கிறேன்.
தி.மு.க. தோன்றிய இராயபுரத்திற்கு வந்திருக்கிறேன். 1949-ஆம் ஆண்டு கொட்டும் மழையில் இதே இராயபுரத்தில் ராபின்சன் பூங்காவில் அறிஞர் அண்ணா அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டது தான் திராவிட முன்னேற்றக் கழகம். முதன் முதலில் தி.மு.க. தலைமை அலுவலகம் அறிவகம். அந்த அறிவகம் இருக்கும் இராயபுரத்தில் உங்களிடத்தில் வாக்குக் கேட்க வந்திருக்கிறேன்.
இந்த இராயபுரத்தில் இருக்கும் அமைச்சர் ஜெயக்குமாரை ஓட ஓட விரட்ட வேண்டும். அதற்காக வந்து இருக்கிறேன். தோல்வி என்றால் உங்கள் வீட்டு தோல்வி - எங்கள் வீட்டு தோல்வி அல்ல. படுதோல்வி அடைய வேண்டும். டெபாசிட் பறி போக வேண்டும். அதற்காகத்தான் உங்களை தேடி நாடி வந்திருக்கிறேன். அவரை சாதாரணமாக நினைத்து விடாதீர்கள். பலே கில்லாடி அவர். ஜெயலலிதாவையே கவிழ்க்க பார்த்தவர் அவர். 2011-ஆம் ஆண்டு அம்மையார் ஜெயலலிதா அவர்கள் இதே ஜெயக்குமாருக்கு சபாநாயகர் பதவியை கொடுத்து அழகு பார்த்தார்.
ஆனால் சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா அவர்கள் ஜெயிலுக்கு போய் விடுவார் என்று நினைத்து, அதனால் அந்த இடத்தை நான் தான் நிரப்ப போகிறேன். அந்த இடத்திற்கு நான்தான் வரப்போகிறேன் என்று தன்னுடைய பிறந்தநாளுக்கு போஸ்டர் அடித்து ஒட்டியவர்.
இந்த செய்தி ஜெயலலிதா அம்மையாருக்கு தெரிந்து, அந்த பதவியை பறித்த கதைதான் ஜெயக்குமார் கதை. இப்போது எடப்பாடியின் பி.ஆர்.ஓ.வாக வேலை செய்கிறார்.
அவர் மைக்கை பார்த்தால் பேசுவார். மக்களை பார்த்தால் பேச மாட்டார். இதே குடியுரிமை சட்டத்தை இந்த பாஜக ஆட்சி கொண்டுவந்தபோது, வண்ணாரப்பேட்டை பகுதியில் கிட்டத்தட்ட பல நாட்களாக இஸ்லாமிய சமூகத்தைச் சார்ந்தவர்கள் அதிலும் குறிப்பாக பெண்கள் தொடர் போராட்டத்தை நடத்திக் கொண்டிருந்தார்கள்.
நான் பலமுறை வந்தேன். அவர்களுக்கு நம்முடைய தி.மு.கழகத்தின் சார்பில் ஆதரவு தெரிவித்தோம். ஒரு கட்டத்தில் கொரோனா ஆபத்து வந்தது. அதனால் இப்படி கூட்டமாக இருந்தால் அந்த நோய் வந்துவிடக்கூடாது என்பதற்காக நானே நேரடியாக வந்து உட்கார்ந்து அவர்களிடத்தில் பேசினேன். போராட்டத்தை ஒத்தி வையுங்கள். சுவர் இருந்தால்தான் சித்திரம் எழுத முடியும். எனவே ஒத்தி வையுங்கள். நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். கடைசிவரையில் விடமாட்டோம் என்று சொன்னேன்.
நாம் ஆட்சிக்கு வந்தவுடன் முதல் வேலையாக அதை எதிர்த்து சட்டமன்றத்தில் தீர்மானம் போடுவது மட்டுமல்ல, உள்ளே நுழைய விடமாட்டோம். எப்படி கேரளாவில் இருக்கும் முதலமைச்சர் உள்ளே நுழைய விடவில்லையோ, மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி அவர்கள் அனுமதிக்கவில்லையோ அதேபோல தமிழ்நாட்டில் தி.மு.க. ஆட்சிக்கு வந்ததற்கு பிறகு அதை அனுமதிக்காது என்ற உறுதியை நான் இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்ள கடமைப்பட்டிருக்கிறேன்.
இப்போது நடனம் ஆடி பாட்டு பாடுகிறார். இஸ்லாமிய சகோதரர்களுக்கு காட்டுவதற்காக ஒரு நாடகத்தை இப்போது நடத்திக்கொண்டிருக்கிறார். வண்ணாரப்பேட்டையில் போராட்டத்தை நடத்தியவர்களை என்றைக்காவது ஒருநாள் சென்று பார்த்தீர்களா? போராட்டத்தை நிறுத்துங்கள் நாங்கள் இருக்கிறோம் என்று சொன்னீர்களா?
நாடாளுமன்றத்தில் ஆதரித்து ஓட்டுப்போட்டவர்கள் நீங்கள். மாநிலங்களவையில் மட்டும் அ.தி.மு.க.வைச் சேர்ந்த 11 எம்.பி.க்கள் அதை எதிர்த்து ஓட்டு போட்டிருந்தால் அது நிறைவேறி இருக்காது. ஆனால் அதை ஆதரித்து ஓட்டு போட்டு விட்டு இப்போது கூட்டணி வேறு வைத்திருக்கிறீர்கள்.
கூட்டணி வைத்திருக்கிறீர்களே… தைரியமாக நாங்கள் பாஜகவுடன் இருக்கிறோம் என்று தேர்தல் பிரச்சாரம் செய்வதற்கு உங்களுக்கு யோக்கியதை இல்லை - அருகதை இல்லை - தைரியம் இல்லை துப்பு இல்லை.
அவர்களை ஆதரித்து கூட்டணி வைத்துக்கொண்டு, அவர்கள் பெயரை சொல்வதற்கு கூச்சப்படுகிறார்கள். நீங்கள் மறைத்தால் மக்கள் அதை நம்பி விடுவார்களா?
ஒரு அடிமை ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. மோடி என்ன சொல்கிறாரோ, அதை கைகட்டி கொண்டு, வாய் பொத்தி கொண்டு கூனி குறுகிக் கேட்டுக்கொண்டிருக்கிறீர்கள்.
இதை அ.தி.மு.க. ஆட்சியில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் ஊழல்களை பட்டியல் போட்டு ஏற்கனவே நாம் தமிழக ஆளுநரிடத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் மனுவை கொடுத்திருக்கிறோம். அவர் நடவடிக்கை எடுக்க மாட்டார் அதுவும் எங்களுக்கு தெரியும். இருந்தாலும் மரபின் அடிப்படையில் கொடுத்திருக்கிறோம். ஆனால் நாம் ஆட்சிக்கு வந்து அடுத்த நாள் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். அதில் எந்த மாற்றமும் இல்லை. இதில் சில பிரச்சினைகள் நீதிமன்றத்தில் இருக்கிறது.
ஒரு தனியார் நிறுவனத்திற்கு ஆதரவாக வாக்கி டாக்கி கொள்முதல் செய்வதில் ஊழல் நடந்திருப்பதை சொல்லி வழக்கு நடந்து கொண்டிருக்கிறது. உவரி கடற்கரை தூண்டில் வளைவு அமைக்கும் திட்டத்தில் ஊழல் நடந்திருக்கிறது என்று ஆதாரத்தோடு நமது கழக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அய்யாவு லஞ்ச ஒழிப்புத்துறையில் புகார் கொடுத்திருக்கிறார்.
மத்திய அரசு தனியாருக்கு தாரை வார்த்த காட்டுப்பள்ளி துறைமுகத்தால் இந்த வட்டாரத்தில் மீனவர்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்பதை நாம் தொடக்கத்திலிருந்தே எதிர்த்துக் கொண்டு இருக்கிறோம்.
மீன்வளத்துறை அமைச்சராக இருக்கும் ஜெயக்குமார் இது பற்றி எங்காவது வாய் திறந்து பேசியிருக்கிறாரா?
கொரோனாவால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு ஏதாவது உதவி செய்திருக்கிறாரா? இராயபுரம் கழிவுநீர் திட்டம் புதுப்பிக்கப்பட்டதா? சீன மோட்டார் இயந்திரங்கள் பயன்பாடு குறித்த பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டாரா? காசிமேடு மீன்பிடி பகுதியை மேம்படுத்தினாரா? கடல் அரிப்பை தடுக்க ஏதாவது முயற்சி செய்திருக்கிறாரா? மீனவர்களுக்கு மானிய விலையில் வழங்கப்படும் டீசலை உயர்த்தி வழங்க ஏதாவது செய்திருக்கிறாரா? மீனவர் நல வாரியம் இப்போது சரியாக செயல்படுகிறதா? மீன் வளத்தை வலுப்படுத்துவதற்காக என்ன செய்து கிழித்தார் இந்த ஜெயக்குமார்?
5 முறை இந்த தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருந்தும் இந்த இராயபுரத்திற்கு ஒன்றுமே செய்யாத ஒரு எம்எல்ஏ இருக்கிறார் என்றால் அவர் ஜெயக்குமாராகத்தான் இருக்க முடியும். அப்படிப்பட்டவருக்கு நீங்கள் சரியான பாடத்தை வழங்குவதற்கு தயாராக இருக்க வேண்டும்.
முதலமைச்சர் பழனிசாமி இப்போது பேசும் பேச்சுகளைப் பார்த்தால் நமக்கு சிரிப்பு வருகிறது. அவர் உழைத்து உழைத்து முன்னுக்கு வந்தாராம். அவர் ஊர்ந்து ஊர்ந்து காலில் விழுந்து வந்ததை, இல்லை என்று நிரூபிக்கட்டும் அவர் என்ன சொன்னாலும் கேட்பதற்கு நான் தயாராக இருக்கிறேன்.
இந்த லட்சணத்தில் ஸ்டாலின் உழைக்காமலேயே முதலமைச்சராக ஆசைப்படுகிறார் என்று சொல்கிறார். என் உழைப்பு பற்றி பழனிசாமி சொல்வதா? என் உழைப்பை பற்றி இங்கு இருக்கும் தொண்டர்கள் தோழர்கள் சொல்லட்டும். ஓய்வுக்கே ஓய்வு கொடுத்து உழைத்த தலைவர் கலைஞரால் “உழைப்பு, உழைப்பு, உழைப்பு, இதுதான் ஸ்டாலினிடம் எனக்குப் பிடித்தது” என்ற பாராட்டைப் பெற்றவன் நான். அந்தப் பாராட்டுதான் குடியரசுத் தலைவர் பதவியையும் விட எனக்குப் பெரிய பதவி.
பழனிசாமி என்று நினைத்தாலே, சமூகவலைதளத்தில் வந்த காட்சிகள்தான் நினைவுக்கு வருகிறது. அதை இல்லை என்று வாய்கூசாமல் மறுக்கிறாரே, மக்கள் என்ன முட்டாள்களா?
பழனிசாமி என்று சொன்னாலே கலெக்சன் தான். பழனிசாமி என்று சொன்னாலே கரப்சன்தான். பழனிசாமி என்று சொன்னாலே கமிஷன் தான். பழனிசாமி என்று சொன்னாலே கொடநாடுதான். பழனிசாமி என்று சொன்னாலே கொள்ளைதான். கொலைதான். பழனிசாமி என்று சொன்னாலே சாத்தான்குளம் தான். பழனிசாமி என்று சொன்னாலே தூத்துக்குடியில் 13 பேரை சுட்டுக் கொன்ற கதைதான். பழனிசாமி என்று சொன்னாலே நீட் தேர்வால் அனிதா உள்ளிட்ட பலர் இறந்து போனார்களே… அதுதான் நினைவுக்கு வருகிறது. பழனிசாமி என்று சொன்னாலே ஜெயலலிதாவுக்கும் சசிகலாவுக்கும் செய்த துரோகம்தான் நினைவிற்கு வருகிறது. பழனிசாமி என்று சொன்னாலே பொள்ளாச்சிதான்.
இன்றைக்கு அதிமுக பாஜகவின் கழகமாக மாற்றி விட்டார், அது தெரியுமா உங்களுக்கு? தமிழக வரலாற்றிலேயே ஒரு கரும்புள்ளி எது என்றால் அது பழனிசாமிதான். நம் சுய மரியாதையே போய்விட்டது. தன்மானம் போய் விட்டது. நம்முடைய உரிமை பறிபோய் விட்டது. மாநிலத்தின் உரிமைகளை டெல்லியில் அடமானம் வைத்து விட்டார்.
எனவே இந்த கொள்ளை கூட்டத்தை கோட்டையிலிருந்து விரட்ட வேண்டுமா வேண்டாமா? இந்த கிரிமினல் கேபினட் சிறைக்கு அனுப்ப வேண்டுமா வேண்டாமா? அதற்கான தேர்தல் தேதி தான் ஏப்ரல் 6.
எனவே, நம்முடைய மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளர்களை நிறுத்தப் பட்டிருக்கும் நம்முடைய கழக வேட்பாளர்களை உதயசூரியன் சின்னத்தில் ஆதரித்து மிகப்பெரிய வெற்றியைத் தேடித் தரவேண்டும்.
கழகத்தின் சார்பில் தேர்தல் அறிக்கை வெளியிட்டு இருக்கிறோம். அதில் மகளிருக்கான சிறப்புத் திட்டங்கள், உதவிகள், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு என அனைத்துத் தரப்பினருக்குமான வாக்குறுதிகளை வழங்கி இருக்கிறோம்.
அவற்றில் இந்த எட்டுத் தொகுதிகளுக்கான குறிப்பிடத் தக்க வாக்குறுதிகளை இப்போது சொல்கிறேன்.
சென்னை பெருநகரில் மழைக் காலத்தில் வெள்ளமெனத் தேங்கி நிற்கும் தண்ணீரை வெளியேற்ற போர்க்கால நடவடிக்கைகள் எடுக்கப்படும். தண்டையார்பேட்டை அரசு மருத்துவமனை நவீனப்படுத்தப்படும். சென்னையில் சிதைந்து போன குடிசைமாற்று வாரிய வீடுகள் மீண்டும் கட்டித்தரப்படும். கொடுங்கையூரில் உள்ள குப்பைக் கிடங்கு நகருக்கு வெளியே அமைக்கப்படும். பெரம்பூர் தொகுதியில் தாய்சேய் நல மருத்துவமனை கட்டப்படும். காட்டன் கேப்டன் கால்வாய், கொடுங்கையூர் கால்வாய், வியாசர்பாடி கால்வாய் ஆகியவற்றில் வெள்ளத்தடுப்புச் சுவர் அமைக்கப்படும். இராயபுரம், வண்ணாரப்பேட்டை, தண்டையார்பேட்டையில் சலவைத் துறை அமைக்கப்படும். அங்குப் பணியாற்றுபவர்களுக்கு அருகில் உள்ள குடிசைமாற்று வாரிய குடியிருப்புகளில் வீடுகள் ஒதுக்கப்படும். காசிமேடு அருகில் கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டம் நிறைவேற்றப்படும். புதிய வண்ணாரப்பேட்டை, கொருக்குப்பேட்டையில் உள்ள தாய்சேய் நல விடுதி நவீனமாக்கப்படும். ஆர்.கே. நகர் தொகுதியில் 24 மணிநேரமும் செயல்படக் கூடிய அரசு மருத்துவமனை கட்டப்படும். வடக்கு பெரம்பூரில் தொழிற்பயிற்சி நிலையம் தொடங்கப்படும். கொடுங்கையூர் - யூனியன் கார்பைடு குடியிருப்பில் சமுதாயக் கூடம் அமைக்கப்படும். மூலக்கடை, மாதவரம், நொச்சிக்குப்பத்தில் அரசு மருத்துவமனை தொடங்கப்படும். சென்னைப் பெருநகரில் தேவையான இடங்களில் சமுதாயக் கூடங்கள் கட்டப்படும். திருவொற்றியூரில் தொழிற்பூங்கா அமைக்கப்படும். திருவொற்றியூரில் அரசு பொறியியல் கல்லூரி தொடங்கப்படும். திருவொற்றியூர் மேற்கு பகுதியில் அரசு மேல்நிலைப் பள்ளி தொடங்கப்படும். கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூலகம் போல் வடசென்னையிலும் ஒரு பெரிய நூலகம் அமைக்கப்படும். செங்குன்றத்தில் விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவுக்கான மருத்துவமனை அமைக்கப்படும். மாதவரத்தில் பாலிடெக்னிக் கல்லூரி தொடங்கப்படும். நெற்குன்றத்தில் கால்நடை மருத்துவமனை அமைக்கப்படும். மாதவரம் லட்சுமிபுரத்தில் சமுதாயக் கூடம் அமைக்கப்படும். தண்டையார்பேட்டையில் ரயில்வே மூன்றாவது முனையம் அமைக்கப்பட முயற்சிகள் மேற்கொள்ளப்படும். மாதவரம் சென்னை மாநகராட்சி மண்டலம் 3-ல் அரசு மகப்பேறு மருத்துவமனை அமைக்கப்படும். மீனவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் காட்டுப்பள்ளி அதானி துறைமுகம் விரிவாக்கும் பணிகளைத் தடுத்து நிறுத்த ஆவன செய்யப்படும். எண்ணூர் முகத்துவாரத்தில் உள்ள மணல்திட்டு அகற்றப்பட்டு ஆழப்படுத்தப்படும். எண்ணூர் அரசு நடுநிலைப் பள்ளி உயர்நிலைப் பள்ளியாகத் தரம் உயர்த்தப்படும். திருவொற்றியூர் அரசு மருத்துவமனை நவீனமாக்கப்படும். மாதவரம், புழல், செங்குன்றம், திருவொற்றியூர், மணலி ஆகிய பகுதிகளில் இசுலாமியர்களுக்கும், கிறித்தவர்களுக்கும் அடக்க ஸ்தலம் அமைத்திட தனித்தனியே இடம் ஒதுக்கீடு செய்யப்படும். மாதவரம் ரவுண்டானா முதல் சோழவரம் டோல்கேட் வரை உயர்மட்ட மேம்பாலம் அமைத்துத் தரப்படும்.
இவையெல்லாம் 5 ஆண்டுகளில் நிறைவேற்றப்பட இருக்கும் வாக்குறுதிகள். கடந்த 7 ஆம் தேதி திருச்சியில் நடைபெற்ற மாபெரும் மாநாட்டில், ‘ஸ்டாலினின் 7 வாக்குறுதிகள்’ என்ற தலைப்பில் பத்தாண்டுகளுக்கான தொலைநோக்குப் பார்வையுடன் கூடிய திட்டங்கள் குறித்த உறுதியை அளித்துள்ளேன்.
இந்த மண்ணில், இந்தியைத் திணித்து மதவெறியைத் தூண்டலாம் என நினைப்பவர்களுக்கு ஒன்றைச் சொல்லிக் கொள்வேன். “இது திராவிட மண். அறிஞர் அண்ணா, தந்தை பெரியார் பிறந்த மண். கலைஞர் வாழ்ந்த மண். கலைஞர் நம்மை எல்லாம் ஆளாக்கிய மண் இந்த மண். உங்கள் மோடி மஸ்தான் வேலை எல்லாம் இங்கே பலிக்காது. தமிழக மக்கள் தயாராக இருக்கிறார்கள்.
ஒரு அதிமுக வேட்பாளர்கூட வெற்றி பெற்றுவிடக் கூடாது. பாஜக வேட்பாளர்கள் வெற்றி பெற முடியாது என்பது வரலாறு. ஆனால், ஒரு அதிமுக வேட்பாளர் வெற்றி பெற்றாலும் அவர் பாஜக உறுப்பினராகத்தான் செயல்படுவார். நாடாளுமன்றத் தேர்தலில் ஒரே ஒரு அதிமுக எம்.பி. – ஓபிஎஸ் மகன் - வெற்றி பெற்றார். அவரும் பாஜக எம்.பி.யாகத்தான் தற்போது செயல்பட்டு வருகிறார். அதுதான் உதாரணம். அவர்தான் சிஏஏ சட்டத்திற்கு ஆதரவாக நாடாளுமன்றத்தில் வாக்களித்தவர்.
இங்கே உங்கள் முன் நிற்கும் கழக வேட்பாளர்களுடன் நானும் வேட்பாளராகத்தான் நிற்கிறேன். முதலமைச்சர் வேட்பாளர். நான் கொளத்தூர் தொகுதியின் வேட்பாளர் என்றாலும், தமிழகம் முழுமைக்கும் முதலமைச்சர் வேட்பாளர். எனவே, நான் முதலமைச்சராக வேண்டும் என்றால் இவர்கள் அனைவரும் வெற்றி பெற்றாக வேண்டும். எனவே இவர்கள் அனைவரையும் வெற்றி பெற வையுங்கள் என்று உங்களை அன்போடு கேட்டு விடைபெறுகிறேன். நன்றி. வணக்கம்.
இவ்வாறு கழகத் தலைவர் அவர்கள் உரையாற்றினார்.